Thursday, December 13, 2007

6. எது சுகம்? - 1

6. எது சுகம்? - 1
****************
மனிதா! நீ சுகத்தை அடைய விரும்புகிறாயா? நீ சுகத்தை அடைய முயலுகிறாயா? அல்லது , அதற்குத் தகுந்த ஒரு வழி வேண்டுமென ஆசைப்படுகிறாயா? அப்படியானால், நீயே பாக்கியவான்! நீ வாழ்வாய்! வா; வா. இந்த வழியை ஆராய்ந்து பார். இந்த வழியில் பூரணமான சுகத்தை அடைய முடியும் என்று நம்பிக்கை பிறக்கிறதா? எனப் பார். உனக்குச் சரி எனப் பட்டால் கடைப்பிடி; விடாது உழை; பயனைப் பரிபூரணமாக அடை.

சுகம் என்றால் என்ன? சொல். எது சுகம்? இதுவரை நீ அனுபவித்தவைகளில் எது சுகம்? பஞ்சேந்திரியங்களின் மூலம் உனக்குக் கிட்டும் நல்ல அனுபவங்களையே "சுகம்" என்கிறாய். பிடிக்காதவற்றைத் "துக்கம்" என்கிறாய். அப்படித்தானே?

இவ்வாறு நீ சுக - துக்கத்தைப் பற்றி கொண்டுள்ள கொள்கை தவறானது.
ஆகையால்தான், அந்தச் சுகத்தை அடையவும், துக்கத்தை விலக்கவும் (உன் கொள்கையின்படி), நீ முயன்ற வழிகள் எல்லாம் தவறாகிவிட்டன. வழி தவறானதால், துக்கக் கலப்பு இல்லாத சுகத்தை உன்னால் அடைய முடியவில்லை.


உன் கருத்துப்படி, பஞ்சேந்திரியங்களின் அனுபவத்திற்கு வேண்டிய பொருட்கள் கிடைத்திருக்கும்போது சுகமும், இல்லாதபோது துக்கமும் அல்லவா கிடைத்திருக்க வேண்டும். நீ தூங்கும்போது சுகம் அனுபவிக்கிறாய். அங்கு
பஞ்சேந்திரியங்களின் அனுபவம் ஒன்றுமில்லையே? ஆனால், கனவற்ற தூக்கம் எல்லோருக்கும் சுகமாகவே உள்ளது; பஞ்சேந்திரியங்கள் வேலை செய்யாதபோது துக்கம் அல்லவா இருக்கவேண்டும்? அப்படி இல்லையே? அதற்கு மாறாக, உடலுணர்வு (அல்லது பஞ்சேந்திரிய அனுபவம்) இல்லாதபோது சுகமாக அல்லவா இருக்கிறது! இதற்கு நீ என்ன சொல்லுவாய்? ஆகவே, பஞ்சேந்திரியங்களின் உதவி இல்லாமலே சுகம் அனுபவிக்க முடியும் என்பதை நீ ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.


தொடரும்.....

5. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 4

5. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 4
***************************************************
இந்த நிலையில் மனுக்குலத்துக்கு தக்க ஒரு வழிகாட்டி தேவை. அவர்களை மக்கள் ஞானிகள் என்கின்றனர். அவர்கள், அந்தப் பரிபூரண சுகத்தை அடைந்து தெளிந்தவர்கள். மேலும், அந்த சுகத்திலேயே எப்போதும் திளைத்துக் கொண்டு இருப்பவர்கள். ஆனால், வெளியில் பார்க்கும்போது இயல்பாகவே தெரியும்.
அந்தப் பரிபூரண சுகத்தை அடையப் பிறருக்கு உதவுபவர்கள். அவர்களில் ஒருவரே, பகவான் இரமணர்.

அவரால் உலக மக்களுக்குப் போதிக்கப்பட்டது என்ன?
அவரிடம் இருந்து மக்கள் அடையவேண்டிய உயர் நலன்கள் யாவை?

யுகயுகமாக மக்கள் அறிவால் பல்வேறு துறைகளிலும் முயலும் முயற்சி எதுக்காக? சுகத்துக்காகத்தான். இதற்கு பகவான் இரமணர் காட்டிய வழி:
ஒரு நேர்கோண முக்கோணத்தின் குறுக்குக் கோடுபோல (hypotenuse of a right-angled triangle) நேர் வழியாகவும், கடைப்பிடிக்க எளிமையாகவும் இருப்பதைக் காண்போம்.

அந்தப் பரிபூரண சுகத்தை அடைய விரும்புகிறவர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள் இந்த வழியைப் பின்பற்றலாம். மதங்களில் கூறப்பட்டுள்ள உயர்ந்த குறிக்கோள் கடவுள் எனப்படுவது. அந்தக் கடவுளை "இல்லை" என்று கூறுவோர்கூட , எனக்குச் சுகம் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். மனித உடல் எடுத்த யாரும் இதற்கு விலக்கல்ல. இரமணர் ஒரு மத குரு அல்ல. உலகப் பொது நோக்கமாகிய பரிபூரண சுகத்தை அடையும் வழியை போதிப்பதால் அவர் உலக குரு எனக் கொள்ளலாம்.

இனி வழி என்ன? எனப் பார்ப்போம்.

4. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 3

4. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 3
*************************************************

கொஞ்சம்கூடத் துன்பம் கலக்காத முழுஇன்பத்தையே மனிதன் எவனும் விரும்புகிறான் என்பது திண்ணம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவ்வித சுகத்தை, இன்பத்தை, இதுவரை எந்த மனிதனும் அடையவில்லை. அதாவது, பஞ்சேந்திரியங்களைத் திருப்தி செய்யும் முறையால் அதை எவனும் அடையவில்லை. அம்முறையில், இதுவரை உலகம் உழைத்து முன்னேறியதால் முழுச்சுகம் அடையைப்படவில்லை என்பது நன்கு விளங்கி விட்டது.

ஆனால் அப்படிப்பட்ட சுகத்தை அடைய முடியாதா? முடியும். துன்பக் கலப்பு இல்லாமலும், எப்போதும் நீங்காததுமாகிய (முழுச் சுகமாகிய) பெரிய இன்பம் ஒன்றை அடைய வேண்டும் என்று உயிர்கள் நினைப்பது தப்பு அல்ல!
சுக இச்சை தப்பு அல்ல! அது அடையப்பட வேண்டியதே! அதுவே புருஷார்த்தம்!! ஆனால், அதற்கு இந்நாள் வரையில் மனிதர்கள் வழிவகுத்து நடத்தி வரும் திட்டம்தான் தப்பாக உள்ளது. அதனால்தான் மனிதன் எவ்வளவுதான் உழைத்தாலும், அந்தப் பூரண சுகத்தை அடையவில்லை.

இவ்விதம் சகல சீவர்களும் விரும்பும் பரிபூரண சுகத்திற்கு அழைத்துச் செல்லும் மார்க்கங்களே உலகில் தோன்றியுள்ள மதங்களாம். "மதம்" என்றால் (மதிக்கப்பட்ட) கொள்கைகள் அல்லது வழிகள் என்று பொருள்படும். எந்த வழியில் முயன்றால் பூரண சுகத்தை அடையலாம் என்பதைக் காட்டிக் கொடுப்பதே மதங்களின் வேலை. ஆனால், தற்பொழுது, பற்பல மதங்கள், தத்தம் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி வந்தும்கூட, மனிதன் மனிதாபிமானம் என்ற ஒரு வெறி மயக்கத்தாலும், மதங்களின் உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத அறியாமையினாலும், எம்மதத்தை ஒழுகுபவனாய் இருந்தாலும், அவன் அந்தப் பரிபூரண சுகநிலையைப் போய் அடையாமல், இடைவழியிலேயே தடுக்கப்பட்டு விடுகிறான்.

**** தொடரும்

3. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 2

3. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 2
************************************************

கண்ணுக்கு இனியதைக் கண்டதும் மனிதன் ஆனந்தம் அடைகிறான். அந்தக் காட்சி மறைந்ததும் துக்கம் அடைகிறான். காதுக்கினிய பாடலையோ, பேச்சையோ கேட்கும்போது ஆனந்தமும், அது நீங்கியவுடன் துக்கத்தையும் அடைகிறான். காட்சி, கேள்வி இவைகளைப் போலவே தொடுவுணர்வு (ஸ்பரிசம்), நுகர்வு ஆகியவைகளையும் சுக வடிவாகவும், துக்க வடிவாகவும் மனிதன் அனுபவிக்கிறான். மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் மனிதனுக்குச் சுகத்தைக் கூட்டி வைப்பதாகத் தோன்றினாலும், அவைகள் எப்போதும் இடைவிடாமல் சுகம் தருவது இல்லையே!

"சினிமா, கணினி" போன்ற காட்சிகளை அளவுக்கு மீறிப் பார்க்க, கண் எரிச்சலுண்டாகிக் கெட்டுப்போய் கண் நோய் உண்டாகிறது. மற்றவிதக் கண்காட்சிகளும், எப்போதும் கண்டுகொண்டிருக்க முடியாமல், ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றன. காதின் இனிமையும் இப்படித்தான். எவ்வளவு நேரம்தான் இசை கேட்கமுடியும்? இசை முடிந்துவிடும்; அல்லது இந்த மனிதன் அவசர வேலையாக அங்கிருந்து போகவேண்டி இருக்கும். இவ்வாறே, காதால் அனுபவிக்கப்படும் சுகத்துக்கும் முடிவு உண்டாகிறது. மூக்கின் வாசனையும் அப்படியே. அதிகமான மணத்தை நுகர்ந்தால் தலைவலியோ, மூக்கில் இரத்தமோ வந்துவிடும். அந்த வாசனை தந்த பொருட்களும் விரைவில் வாசனையை இழந்துவிடும். ருசி(taste)யும் அப்படியே. நாக்கால் ருசித்து எவ்வளவு சாப்பிட முடியும்? வயிற்றில் இடம் இருக்கும்வரை மட்டும்தான். அதிக ருசி இருந்தால் தெவிட்டல் வந்துவிடும். ஆகவே, ருசியும் நீடித்த சுகம் தருவது இல்லை. தொடுவுணர்வும் அப்படியே.

பஞ்சேந்திரியங்களால் நாம் எந்த சுகத்தையும் நீடித்து அனுபவிக்க முடியாது. அளவுக்கு மீறினால், சுகத்துக்குப் பதிலாக துக்கத்தைத் தந்துவிடும். எனவே, மனிதன் தேடும் சுகமானது அவனுக்குப் பூரணமாக, நிரந்தரமாகக் கிடைப்பதில்லை.
இதுவே இந்த ஆராய்ச்சியின் பயன்.

***** தொடரும்

2. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 1

2. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 1
************************************************

உலகம் அறிவால் முன்னேறுகிறது. அறிவின் விளக்கமே இந்த உலகில் காணப்படும் சிறப்புகள்.
உலகம் எதை நோக்கி முன்னேறுகிறது? உலத்திற்கு என்ன வேண்டும்?
ஊன்றிக் கவனிக்க மனுக் குலம் அனைத்துமே சுகத்தை அடையவே பாடுபடுகின்றனர் என்பது தெரியவரும். எறும்பு முதல் அரசாள்பவன்வரை அனைவருமே உழைக்கின்றனர். எதற்காக? சுகத்துக்காகவேதான்.

ஒவ்வொருவருக்கும், தற்போது தனக்கிருக்கும் நிலையைவிட சுகமான நிலை வேண்டுமென்ற தணியாத ஆவல் இருக்கிறது. அந்த ஆவலே இம்மாதிரியான உழைப்புக்குக் காரணம். இது தப்பல்ல; நல்லதே! மனிதனுக்கு மென்மேலும் சுகமாயிருக்க விருப்பம் உண்டாவதால், அவனுக்குத் தற்போது சுகமானது முழுவதுமாகக் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. ஒருவன் மிகப் பாடுபட்டு உழைத்து, வாழ்வுக்கு வேண்டிய உணவு, வீடு, மனைவி, மக்கள், உத்தியோகம் போன்ற பல சுக சாதனங்களைப் பெருக்கிக்கொள்ளுகின்றான். ஏன் என்றால், அவைகளிலிருந்து தனக்குச் சுகம் உண்டாகும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறான்.

இவ்வாறு, மனிதன் தேடும் சுகமானது, அவனால் அனுபவிக்கப்படுகிறது. ஆனால், அது நீடித்து நிற்பதில்லை. கொஞ்ச நேரமே சுகம்போல் தோன்றிப் பிறகு அது விலகிவிடுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் சுகம் அனுபவிக்கும் பற்பல வழிகளையும் ஆராய்ந்தால், பொதுவான ஒரு முடிவுக்கு வரலாம்.

அதாவது, மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐந்து பொறிகளால் அனுபவிக்கப்படுவதே, இப்போது மனிதன் கண்டுள்ள சுகம். இந்த ஐந்து கருவிகளுக்கும் வேண்டியதைத் தேடுவதே, இன்றுவரை மனித குலத்தின் பேருழைப்பாக இருந்து வருகிறது.

***** தொடரும்

1. என்னைப்பற்றி

1. என்னைப்பற்றி
*****************

பகவான் இரமண மகரிஷியின் கொள்கைகளின் அடிச்சுவட்டில் வளர்ந்துவரும் நான், அவரைப்பற்றிப் பலர் எழுதியுள்ள விதயங்களின் அடிப்படையில் , அவரின் போதனைகளைப் பற்றி விளக்கலாம் என்று எண்ணி இவ் வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். தமிழ்மணம், தேன்கூடு ஆகியவைகளின் திரட்டிகளைப் படித்த பின்னர்தான் இம்மாதிரியான விஷயங்களையும் படிக்க மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்; நாமும் எழுதுவோம் என்ற தைரியம் வந்தது.

ஹோமியோபதி மருந்துபோலக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.